ஓர் ஆழ்ந்த பெரு மூச்சுடன் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளை சுத்தப்படுத்தி விட்டு நிமிர்ந்தவள் அப்போது தான் தன் இரு கரங்களையும் கவனித்தாள்.
கண்ணாடி துண்டுகள் கிழித்து ஆங்காங்கே இரத்தம் கசிந்து கொண்டு இருந்தது.
தனது மனதின் வலியின் முன் அவளுக்கு இக் கீறல்கள் தான் வலியை கொடுத்து விடப் போகின்றனவா என்ன?
நினைத்த மாத்திரத்தில் தானாகவே இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை தோன்றி மறைந்தது.
ஒரு சில கணங்கள் அவனோடு கழித்த நாட்களை எண்ணி மனம் பந்தாடத் தொடங்கிய அதே நேரம், சட்டெனக் கேட்ட குளியலறைக் கதவு திறக்கும் சத்தத்தில் உணர்வுக்கு வந்த பெண்ணவளோ எங்கே மீண்டும் நாவெனும் சாட்டைக் கொண்டு மனம் தாழ முடியாத வார்த்தைகளைக் கூறி வதைத்து விடுவானோ என்று ஐயம் கொண்டவளோ திரும்பியும் பாராது விறு விறுவென தாழிடப்பட்டிருந்த கதவை நோக்கி விரைந்திருந்தாள்.
இடையில் டவலுடன் கேசத்தில் சொட்டிய நீரை கரத்தால் கோதிக் கொண்டே வந்தவன் அறையை விட்டு போகும் அவளைத் தான் பார்த்திருந்தான்.
தான் வந்தது தெரிந்தும் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் போகும் அவளை வெறித்தவன் ‘என்ன திமிர் டி உனக்கு?’ என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டே அவளை சொடக்கிட்டு அழைக்க,
எதிலிருந்தோ தப்பித்து ஓடுவதை போல அறையை விட்டு வெளியேற எத்தனித்தவள் நடையோ அவனது சொடக்கிடும் சத்தத்தில் தடைப்பட்டது.
மீண்டும் தனக்குள் ஆழிப் பேரலையாய் எழும் உணர்வை தவிர்க்க முடியாது அப்படியே சிலை போல் நின்று இருந்தாள்.
அவளிடம் மௌனம்.
” மேடம் எங்க போறீங்க?” என்ற அவனது கேள்வியில், அவளது இதயத் துடிப்போ ஏனென்று தெரியாது படு வேகமாக துடிக்கத் தொடங்கி விட,
இதழ்கள் கூட அவனுக்கு பதில் கூற முடியாது நடுங்க ஆரம்பித்து விட்டன.
தான் கதைத்தும் அவள் பதில் கூறவில்லை என்றதும் அவனது பொறுமை எல்லையை மீற, அக்கணம் ஈகோ எனும் அரக்கன் அவனை ஆட்கொண்டது.
“தெருவுல போற உனக்கெல்லாம் என்னடி திமிர்?” என்றானே பார்க்கலாம்.
அவன் விட்ட வார்த்தைகளை கிரகிக்கவே சில விநாடிகள் பிடித்தன அவளுக்கு,
விழிகள் விரிய நொடியில் மொத்த மேனியும் கிடுகிடுவென நடுங்கிட “ஜிதன்” என முனகியவளின் குரல் கூட வெளியில் வர மறுத்தது.
என்ன வார்த்தை சொல்லி விட்டான்?
மெல்ல திரும்பி அவனை பார்த்தாள்.
அவளை உறுத்து விழித்த படி சுவரில் சாய்ந்து நின்றிருந்தவன் அவளின் கசங்கிய முகம் கண்டு ஒற்றை புருவம் உயர்த்தி ” யூ க்னோ? நான் கேள்வி கேட்டா பதில் சொல்லாம ஜடம் போல நிற்கிறவங்களை பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது” என்று சொன்னவனோ ” கெட் அவுட் ” என உச்சஸ்தாயில் சீறினான்.
ஏனோ, அவன் தான் அவளை மீண்டும் உள்ளே அழைத்தான் என்பதை அந்நொடி நேர ஆத்திரம் கண்ணை மறைக்க, வசதியாக மறந்திருந்தான் அவன்.
என்னவோ அவனது வெறுப்பும், எடுத்தெறிந்த விஷம் தோய்ந்த வார்த்தைகளும் அவளின் தைரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடியோடி புதைத்துக் கொண்டு இருந்தன.
உடல் விறைக்க எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே அவனிடம் கேட்டு விட வேண்டும் என நினைத்து வைத்திருந்த கேள்வியை தன் தைரியத்தை திரட்டி ஒருவழியாக கேட்டே விட்டாள் அவள்.
“போறேன் ஜிதன் பட் எதுக்காக எ..என்..என்மேல இவ்வளவு வெறுப்பு?” என்று கேட்டவளுக்கு மேலும் கேட்டிட துடித்த கேள்விகள் யாவும் தொண்டைக் குழிக்குள்ளேயே சிக்கிக் கொண்டன.
“ஹியர் லிசின், நீ கேட்கிற எல்லாத்துக்கும் நிதானமா ஆன்சர் பண்ணிட்டு இருக்க ஐ ஹேவ் நோ டைம் அண்ட் ஆஃப்டர் ஆல் ஒரு தாலி கட்டிட்டேன்னு உனக்கு அந்த ரைட்ஸ் அஹ் நான் கொடுக்கவும் போறதும் இல்ல சோ யூ மே…” என்று விழிகளால் அறையின் வாயிலை நோக்கினான்.
அவளுக்கோ செருப்பால் அடித்த உணர்வு.
பேசி பேசி ஒருவரை உயிர்த் துடிக்க கொல்ல முடியுமா என்ன?
அதைத் தான் அவன் செய்து கொண்டிருந்தான்.
என்னவோ கொஞ்சம் கொஞ்சமாக அவனை தன் காதலால் மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவளுக்கு இப்போது உள்ளுக்குள் என்னவோ உடைவதைப் போலிருந்தது.
“அண்ட் ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் நீ என்னை ஜிதன்னு கூப்டுறதை நிறுத்து. சச் அன் இரிட்டேடிங்” என்று சொன்னவன் அவளை சற்றும் கண்டு கொள்ளாது உடை மாற்றும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
கதறி அழக் கூட திராணி அற்றவளாய் பிரம்மை பிடித்தவள் போல அவ் அறையை விட்டு விருட்டென வெளியேறியவள் கண்ணாடி துகள்களை யாருமரியாமல் அப்புறப்படுத்தி விட்டு நேரே சென்றது என்னவோ வெட்ட வெளியில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த பூங்காவிற்கு தான்.
அவள் இருக்கும் மனநிலையில் இப்போது யாருடனும் பேசும் எண்ணமே இல்லை.
யாருமே அற்ற தனிமை வேண்டும் போலிருந்தது.
தான் இங்கிருந்து சென்று இருக்கக் கூடாதோ? என இத்தோடு ஆயிரமாவது முறையாக எண்ணி விட்டாள்.
இரண்டு வருடத்திற்கு முன்னர் இருந்த தன்னவனுடன் காதலையும் அன்பையும் பரிமாறிக் கொண்டவளுக்கு ஏனோ இந்த சூழலை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திலும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள் பாவை.
அம் மாலை வேளையில் மிதமாக வீசிய தென்றலும் சுற்றிலும் கேட்ட பறவைகளின் ஓசையும் கூட அவள் மனதை அமைதிப்படுத்தவில்லை.
பூந்தோட்டத்திற்கு மத்தியில் போடப்பட்டிருந்த மர இருக்கையில் கால்களைக் குறுக்கி பித்து பிடித்தவள் போல அமர்ந்திருந்தவள் காரின் ஹாரன் ஒலியில் தான் திடுக்கிட்டு உணர்வு பெற்றாள்.
பக்கவாட்டாக திரும்பி பார்த்தாள்.
அவனோ, அவளைப் அழுத்தமாக பார்த்த படி ஹாரன் அடித்துக் கொண்டே இருக்க,
விழிகளை இறுக மூடி திறந்தவள் அமைதியாக எழுந்து அவனது காரினை நோக்கி விரைந்திருந்தாள்.
அவனையும் அவன் விழிகளில் தெரிந்த அனலையும் புரியாது பார்த்தவளுக்கு தலை தான் விண் விண்ணென்று தெறித்தது.
அமைதியின் இலக்கணமாக வந்து பவ்யமாக வந்து நின்றவள் பார்க்க பார்க்க எரிச்சல் மேலோங்க, அவள் மேல் தோன்றிய கட்டுப்பாடற்ற ஆத்திரத்தில் ஸ்டீயரிங்கில் ஓங்கி குத்தினான்.
அவனது ஆக்ரோஷத்தில் மேலும் மிரண்டு போனவள் நெஞ்சை பற்றி பிடித்த படி ஓரடி பின்னால் நகர்ந்திருந்தாள்.
“வாட் தி ஹெல் இஸ் திஸ்? ஆர் யூ பிளைண்ட்?” என்று கர்ஜித்த படி காரினை விட்டு கீழே இறங்கியவன் அவளின் கரத்தை பற்றி தர தரவென இழுத்துச் சென்றான்.
ஏற்கனவே கண்ணாடிச் சிதறல்களால் ஏற்பட்டிருந்த ரத்தம் காய்ந்திருந்த காயத்துடன் சேர்ந்து அவனது அழுத்தமான பிடியும் சேர்ந்து கொள்ள, மென்மையான பெண்ணவளுக்கோ வலியில் உயிர் போனது.
இதழ் கடித்து வலியை அடக்கிக் கொண்டே அவனோடு இழுபட்டு வந்தவள் அவன் வந்து நின்ற இடத்தை பார்த்து விட்டு அவனை ஏறிட்டாள்.
அவனோ, அவள் கரத்தினை பற்றி இருந்த தனது பிடியை உதறித் தள்ளி விட்டு ” ஜஸ்ட் லுக் அட் யுவர் கார்! இதென்ன பப்ளிக் பார்க்கிங்னு நினைப்பா? என் காரை எடுக்க முடியாம ஸ்டாப் பண்ணி வச்சிட்டு கார்டன்ல உட்காந்து சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க” என சரமாரியாக வாயில் வந்த வார்த்தைகளைக் கடித்து துப்பினான்.
அப்போது தான் அதையே கவனித்தாள் அவள்.
கடந்து இரண்டு நாட்களாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பவளுக்கு இந்த கார் இங்கே நிற்பது எங்கனம் தெரியும்?
அதுவும் தான் இங்கே நிறுத்தவும் இல்லை எனும் போது காரணமே இல்லாமல் என்னை காரணம் சொல்கிறானே இவன்.
நொடிக்கு நொடி அவளின் அழுத்தம் எகிறிக் கொண்டே போக, தலை வெடித்து விடும் என்பதை போல வலிக்க ஆரம்பித்து விட, எங்கே விட்டால் மயங்கி விடுவோமோ என்ற பயம் தொற்றிக் கொண்டதும்,
” சாரி… நான் கவனிக்கல…” என்றாள் சோர்ந்த குரலில்,
“ஷட் அப்! எப்பப் பாரு இந்த ‘சாரி’யை சொல்லி மேனேஜ் பண்ணிடலாம்னு நினைக்காத. திஸ் இஸ் டூ மச்! இது தான் லாஸ்ட் வார்னிங். இனி என்கிட்ட உன் லிமிட்டை கிராஸ் பண்ணாத. மைண்ட் இட்!” என சீறலாக எச்சரித்தவன் அலைபேசியில் யாருக்கோ அழைப்பை எடுத்த படி நகர்ந்திருக்க, அவளுக்கோ புயலடித்து ஓய்ந்தாற் போலிருந்தது.
கண்களை வேறு இருட்டிக் கொண்டு வந்தது.
எதிரில் நின்ற காரின் பொனட்டை பற்றிப் பிடித்த படி தன்னை நிலை நிறுத்திக் கொண்டாள்.
நீண்ட மூச்சுக்களை எடுத்து விட்ட படி தலையை அழுத்தி விட்ட படியே கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வந்தவளுக்கு
இப்போது காரை எடுத்தாக வேண்டிய கட்டாயம்.
‘நகுல் எங்க போனான்னு தெரியலையே’ என மனதில் சொல்லிக் கொண்டே விழிகளை சுழல விட்டாள்.
அவளின் சாரதி அவள் கண்ணில் படவே இல்லை.
சலிப்பாக நெற்றியை நீவிக் கொண்டே தட்டுத் தடுமாறி அலைபேசியை எடுப்பதற்காக வீட்டினை நோக்கி செல்ல முயன்ற கணம், ” மேம் எனி எமர்ஜென்சி?” என்று கேட்டுக் கொண்டே வாயில் புறமிருந்து அவளை நோக்கி விரைந்து வந்திருந்தான் நகுல்.
அவளிடம் மூச்சிறைக்க ஓடி வந்து நின்றவனை கடிய மனமில்லாது “அவர் வெயிட் பண்ணிட்டு இருக்கார் நகுல், காரை எடுங்க சீக்கிரம்” என்றவளோ தலையை அழுத்தி விட்ட படியே “ஹியர் ஆஃப்டர் காரை இது போல நிறுத்தாதீங்க நகுல்” என்ற படி கார் நிற்கும் இடத்தை கண்களால் சுட்டிக் காட்டியவள், அவன் சென்று காரினை அங்கிருந்து கிளப்பும் வரை நின்ற இடத்திலேயே அசையாது நின்றிருந்தாள்.
அலைபேசியில் பேசிக் கொண்டே ஒரு துளைத்தெடுக்கும் பார்
வையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் விழிகளோ அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து விரிந்து கொண்டன.

Super