செக் இன் அனைத்தும் முடித்து விட்டு கிட்ட தட்ட இரண்டு மணிநேர காத்திருப்பின் பின் விழிகளை மூடி விமானத்தில் அமர்ந்திருந்தாள் யாழிசை.
அவளின் வதனம் முழுதும் மகிழ்ச்சி… மகிழ்ச்சி… மட்டுமே நிறைந்திருந்தது.
இறக்கை இருந்தால் இப்போதே மின்னல் வேகத்தில் பறந்து சென்று தன்னவனிடம் அடைக்களமடைந்து விடுவாள் போலும், அவனைக் காண போகும் உற்சாகம் அவளிடம்,
மீண்டும் பழைய உத்வேகம் வந்துவிட்டதைப் போல உணர்ந்தாள்.
‘ ஜிதன், இன்னும் நைன் ஹவர்ஸ்ல உங்க பக்கத்துல இருப்பேன்’ என்று மனதோடு பேசிக் கொண்டு அமர்ந்திருந்தவள் இதழ்கள் தாராளமாக புன்னகையில் விரிந்தன.
இவ்வளவு நேரமும் அவளையே நீண்ட நேரமாக உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தான் அவளருகில் அமர்ந்திருந்த சார்லஸ் எனும் ஆடவன்.
ஒரு சிநேக புன்னகையுடன் அவளையே ரசித்து பார்த்திருந்தவன் “ஹேய் கேர்ள்” என்று அழைத்திருந்தான்.
லண்டனில் அவனின் அழகில் விழாத பெண்கள் இல்லை.
ஏன் அவனாகவே தேடிச் சென்று எந்த பெண்ணிடமும் முன்வந்து பேசியதுமில்லை.
அதில் எப்போதும் அவனுக்கு கர்வமே…
ஆனால் இப்போதோ, தான் புன்னகைத்தும் அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்த அவளின் அலட்சியம் அவனின் கவனத்தை அவள் புறம் திருப்பியிருந்தது.
விழிகள் மூடி தன்னவன் நினைவில் லயித்திருந்தவள் ஓர் ஆடவனின் அழைப்பில் மெல்ல விழிகளை திறந்தாள்.
“இட்ஸ் மீ சார்லஸ்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
மெலிதாக புன்னகைத்தவள் “நைஸ் டூ மீட் யூ” என்று சொல்லி விட்டு மீண்டும் முன்பு போல விழிகளை மூடிக் கொள்ள, அவனுக்கோ அவளின் தோரணையில் மேலும் மேலும் சுவாரசியம் கூடியது.
தான் கதைத்தாலே வந்து விழும் பெண்களின் மத்தியில் புதிதாக தெரிந்தாள் அவள்.
“இன்டர்ஸ்டிங்” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவனோ அத்துடன் நிறுத்துவானா என்ன? அவளோடு பேச வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கிட, சற்றே குரலை செருமிக் கொண்டே “யூ ஆர் பிளஷிங் பியூட்டி” என்றவன் குரலில் விழிகளை திறவாமலேயே “வாட் யூ ஆர் ட்ரைங் இஸ் வேஸ்ட். அம் ஆல்ரெடி கமிடட்” என்று சொன்னவள் வதனம் என்னவோ சாதாரணமாக தான் இருந்தது.
ஆனால் அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு தான் முகம் அஷ்டகோணலாக மாறியது.
ஓர் அதிர்வுடன் விழிகளை மூடித் திறந்தவனோ “சோ கென் ஐ க்னோ ஹூ இஸ் தட் லக்கி பர்சன்?” என்று கேட்டவன் அவளின் பதில் என்னவாக இருக்கும் என்று நிஜமாகவே ஆர்வமாக காத்திருக்க ஆரம்பித்து விட்டான்.
தான் யார்? சாதாரண முன் பின் அறிந்திராத ஒரு பெண்ணிடம் வெட்கத்தை விட்டு பேசிக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
கேசத்தை கோதிக் கொண்டே மென் புன்னகையுடன் இருக்கையில் சாய்ந்தமர்ந்தான் சார்லஸ்.
என்ன நினைத்தாளோ தன்னவனை காணப் போகின்றோம் என்ற எண்ணமே அவளை இறக்கையின்றி பறக்க வைக்க, அந்த இதமான மனநிலையில் யார் எவர் என்று தெரியாத ஒருவனிடம் “ஜிதன்” என்றிருந்தாள் ஆழ்ந்த குரலில்,
தன்னவன் பெயருக்கு கூட வலித்து விடுமோ என நினைத்து விட்டாள் போலும், அவளின் குரலோ இளகி மென்மையாக ஒலித்திருந்தது.
இது தான் காதலின் அவஸ்தையோ என்னவோ!
அவளின் எண்ணம் முழுதும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னோக்கி விரும்பியே தொலைந்திருந்தது.
**************************************
அம் மாபெரும் கலை அரங்கத்தை ஒட்டிய அறையிலுள்ள ஆளுயரக் கண்ணாடியில் இத்தோடு மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் தன்னை சிரத்தை எடுத்து அலங்காரம் செய்து கொண்டிருந்தவளை சலிப்பாக வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நம் நாயகியின் ஆருயிர் தோழி நயா.
“என்னடி என்னை இவ்ளோ பாசமா பார்த்திட்டு இருக்க?” என்று கேட்டிருந்தாள் யாழிசை.
“எத்தனை லேயர் பவ்டர் அப்லை பண்ணிட்டு இருக்கனு கவுண்ட் பண்ணிட்டு இருக்கேன்” என்றாள் அவளின் கையிலிருந்த மேக்கப் கிட்டை முறைத்த படி,
“ஹி ஹி ஹி, இட்ஸ் ஓவர் டி. ஃபைனலா குட்டி டச் அப் மட்டும் பண்ணிட்டு வந்துடுறேன் வெயிட் கரோ” என்றவள் மீண்டும் கண்ணாடியின் புறம் திரும்ப, இதற்கு மேலும் கொஞ்சமும் பொறுமை காக்க முடியாத நயாவோ , “ யாழிசை ஆர் யூ மேட்? நீ ஏற்கனவே அழகு தான் இன்னும் ஏன் பவுடரை அள்ளி அப்பிட்டு இருக்க? எனக்கு தெரியாம காஞ்சுரிங் சீஸன் டென் ஆக்ட் பண்ண போறியா என்ன?” என்று சற்றே காட்டமாக கேட்டு விட,
“பேய் போலவா இருக்கு?” என்று பாவமாக கேட்டவள் மீண்டும் கண்ணாடியில் தன்னை பார்க்க ஆரம்பித்து விட, அவளின் சிறுபிள்ளை தனத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது. காதல் வந்தால் இப்படி தான் முத்தி விடும் போலும் என நினைத்துக் கொண்டவள் “ஓஹ் கோட்! இல்ல தாயே பேரழகியா என் கண்ணுக்கு தெரியிற சோ தயவு பண்ணி கிளம்பு அடுத்த ஸ்டேஜ் பெர்போமன்ஸ் நம்மளோடது தான்”
அவள் அப்படி சொன்னது தான் தாமதம், வேகமாக ஓடிச் சென்று அந்த அறையின் கதவைத் திறந்து மேடையை பார்த்தாள்.
மாணவர்கள் சிலர் நாடகம் ஒன்றை அரங்கேறிக் கொண்டு இருப்பது தெரிந்தது.
“ப்ச்ச” என்று சலித்துக் கொண்டே சற்றே மறைவாக அறைக்கு வெளியில் வந்து அவ் அரங்கத்தில் அமர்ந்து நாடகத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர்களை பார்த்தவள் பார்வை ஓர் இடத்தில் நிலைகுத்தி நின்றது.
அது மட்டுமா என்ன? அவளின் முகமே சூரியனைக் கண்ட தாமரை போல மலர்ந்து போக, இதழ்களில் புன்னகையுடன் “ஜிதன்” என்று சொல்லிக் கொண்டே ஆனந்த பரவசத்தில் துள்ளிக் குதித்தாள்.
“பார்த்து மா மறுபடி மேக்கப் பண்ண உக்காந்துடாத அப்புறம் உன்னை என் பெஸ்டினு கூட பார்க்க மாட்டேன்” என நாக்கை மடக்கி எச்சரித்தாள் நயா.
“போடி லூசு” என்றவள் மெல்லிய வெட்கதுடன் நகத்தை கடித்து துப்பிக் கொண்டே “வாத்தி செம்ம அழகா இருகார்ல” என்க.
“ஆமானு ஒத்துகிட்டா, என் ஆளை ஏன் சைட் அடிச்சனு கேட்டு சாவடிப்ப அது தேவையா எனக்கு?” என்றவளை “ தட்ஸ் குட் மை டார்லிங்” என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
“பைனல் யேர் ஸ்டுடென்ஸ் மிஸ் யாழிசை அண்ட் மிஸ் நயா இன் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் டிபார்ட்மெண்ட் வெல்கம் ஒன் த ஸ்டேஜ்” என்ற விழாவின் தலைமை ஏற்பாட்டாளரின் குரல் கேட்டு பதட்டமடைந்தவள் நொடியில் வியர்க்க விறுவிறுக்க நயாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“ஹேய் கூல்டி, டென்ஷன் ஆகாமல் என்னோட மூவ் பண்ணு இந்த பெர்பாமன்ஸ் பொறுத்த வரை நான் தான் உன் பேர் சோ பிளீஸ் உன் ஜிதன் வாத்தி முன்னாடி சொதப்பிடாம ஃபீலிங்ஸ் எக்ஸ்பிரஸ் பண்ணி டான்ஸ் பண்ணு ” என சொல்லி கையோடு யாழிசையை அழைத்துக் கொண்டு மேடையேறினாள் நயா.
மேடையின் மத்தியில் இருவரும் வந்து நின்றதும், மொத்த அரங்கமே இருள் சூழ்ந்து நிசப்தமாக, அவர்கள் நின்று இருந்த இடத்தில் மாத்திரமே வெண்ணிற ஒளிக் கீற்று பட்டு தெறித்தது.
விழிகளை மூடி ஆழ்ந்த ஒரு பெரு மூச்சை இழுத்து வெளிவிட்டு விழிகளைத் திறந்த யாழிசையோ முதல் வரிசையில் மேடையை, இல்லை இல்லை இருவரையும் விழி அகழாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த கல்லூரியின் இளம் மேலாண்மை நிர்வாக விரிவுரையாளரானா தன்னவனைத் தான் இமைக்கொட்டமல் பார்த்தாள்.
அவனை நேரெதிரே கண்ட பெண்ணவளுக்கோ உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலித்தடங்கியது.
ஒற்றை பார்வைக்கே இப்படி என்றால் அவன் காதல் கிடைத்தால் என்ன செய்வாளோ?
விதி அவளுக்கு என்ன தான் வைத்து காத்துக் கொண்டிருக்கின்றது என யார் தான் அறிவர்?
ஒற்றை பார்வையே அவளை என்னவோ சுழலுக்குள் ஈர்த்து இழுப்பதை போல உணர்ந்தாள்.
அவளின் எண்ண ஓட்டத்தை தடை செய்வது போல பிண்ணனியில், “கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா… நான் கண்ணாடிப் பொருள் போலடா” என்ற வரிகள் ஒலிக்கவும் தன் எதிரே நின்ற தோழியோ, காதல் பாவை அவளுக்கு தன்னவன் போலவே தெரிந்தாள் போலும், இனி கேட்கவும் வேண்டுமா என்ன? முகத்தில் நாணம் வந்து ஒட்டிக் கொள்ள இடை வளைத்து நளினத்துடன் ஆட ஆரம்பித்திருந்தாள் பெண்ணவள்.
