“ம்ம் சொல்லுங்க ஆன்டி, அவருக்கு என்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதமா?” என்று கேட்டவளுக்கு மனமோ ஒரு மூலையில் அவன் சாதாரணமாக சரி திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்க வேண்டும் என்று வினாடிக்கு ஒரு முறை அரட்டிக் கொண்டே இருந்தது.
ஷீலாவோ அதிர்விலிருந்து மீண்டவராய் தன்னை நிதானித்துக் கொண்டே ” அவன் போக போக உன் காதலை புரிஞ்சிப்பான் யாழிசை” என்று அவர் கூறிய ஒற்றை பதிலில் அவளுக்கோ இதழ்கள் விரக்தியாக வளைந்தன.
பின்ன, அவனின் ஒற்றைப் பார்வை தான் மீது விழாதா? எனத் தவியாய் தவித்து போய் காத்திருந்த நொடிகள் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அவனின் காதல் கிடைத்த போது அவனை விட்டு அவள் சென்றிருக்க, இப்போதோ அவனின் தனக்கே தனக்கான காதலை அனுபவிக்க வேண்டி கனவுகளுடன் ஆவலாக வந்தவளுக்கு அனைத்தும் கானல் நீராகி போனது.
“அட்லீஸ்ட் நான் அவரை பார்த்திட்டு சரி வரட்டுமா?” என்றவளின் குரலில் தெரிந்த தவிப்பு அவரை மேலும் மேலும் குற்ற உணர்வில் தவிக்க வைக்க, “இல்லமா இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆகிடும் அப்புறம் நாள் புல்லா பார்க்க மட்டும் இல்ல பேசவும் செய்யலாம்” என்க,
“ஆன்டி ப்ளீஸ் நா..நான் பழசை எல்லாம் கொஞ்சம் கூட ஞாபக படுத்துற போல பேச மாட்டேன் அவரை பார்க்கணும் போல இருக்கு ஆன்டி ப்ளீஸ்” என்றாள் குரல் உடைய,
இதோ வீழ்ந்து விடவா எனும் ரீதியில் அவளின் இரு நீள் விழிகளும் கூட கலங்கி நீர் நிறைந்து விட,
” வேண்டாம் யாழு ஜிதன்கிட்ட அப்பறமா பேசிக்கலாம்” என்று சொன்னது என்னவோ வாசுகி தான்.
தன் அன்னைக்கு கூட தன் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லையா? என்ற கேள்வி எழ, மனமோ அழுத்தம் சூழ்ந்து பாரமாக கனத்தது.
தன்னவன் இங்கே தான் இருக்கின்றான் என்ற உணர்வில் அவனைப் பார்க்க துடிக்கும் தன் காதல் நெஞ்சை அடக்கும் வழியறியாது மேனியோ விறைத்து போக, உயிர் துடிக்க மௌனமாக நின்றிருந்தவளின் தோற்றம் வாசுகியின் நெஞ்சை ஒரு கணம் பதற வைத்தது என்னவோ உண்மை தான்.
“யாழு…” என்ற கேவலுடன் அவளை பாய்ந்து அணைத்துக் கொள்ள,
அந்த ஒற்றை அணைப்பில் மடை திறந்த வெள்ளமென விம்மி வெடிக்கத் துடித்த அழுகையை எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவள் இறுகிப் போய் நின்றிருந்தாள்.
தன் இயல்பைத் தொலைத்து உணர்வுகள் மரித்த நிலையில் நின்றவளின் நீடித்த மௌனத்தை சில விநாடிகள் கழித்தே அவரால் உணர முடிந்தது.
சட்டென அவள் முகத்தை ஆராய்ந்தார்.
கீழ் இதழ் கடித்து விழிகள் மூடி நின்றிருந்தாள் பெண்ணவள்.
அவளை ஈன்றெடுத்த தாய் அல்லவா?
பார்த்த மாத்திரத்திலேயே அவளின் அழுகையை அடக்க தனக்குள் போராடிக் கொண்டு இருக்கின்றாள் என அவளின் ஏறி இறங்கிய தொண்டைக் குழியே கட்டியம் கூற,
“யாழு… அழுகை வந்தா அழுதுடு மா… உன்ன இப்படி பார்க்க முடியல டி” என்றவர் அதீத அழுத்தினால் தானாக சூடேறி சிவந்திருந்த அவளின் கன்னத்தை பற்றிய படி “அம்மா, நீ ஹர்ட் ஆகிடுவனு நெனச்சு தான் உன்கிட்ட ஜிதனுக்கு ஆக்சிடென்ட் ஆனதை மறைச்சிட்டேன் மா. சாரி யாழு ஆனா என்கூட பேசாம மட்டும் இருந்துடாதடா” என்று மன்றாடியவரை பார்த்துக் கொண்டிருந்த ஷீலாவுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது.
அவளோ, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே”முகூர்த்த நேரம் எப்போ?” எனக் கேட்டாள் இறுகிய குரலில்,
இருவரும் அவளை அதிர்ந்து பார்க்க,
“ம்ம் சொல்லுங்க” என்றாள்.
“இன்னும் ஒன் ஹவர் ல மா” என்ற பதில் வந்தது என்னவோ ஷீலாவிடம் இருந்து தான்.
ஆக தனக்குள் உணர்வுகளை அடக்கிக் கொள்கின்றாளா இவள்? என்ற கேள்வி பூதாகரமாக எழுந்ததும் அவளின் எதிர்காலம் குறித்த அச்சம் மனதிற்கும் இப்போதே சூழ்ந்து கொண்டது.
“வெல், என் முகூர்த்த புடவை எல்லாம் எடுத்து வச்சிட்டு போங்க” என்றவளின் உணர்ச்சி துடைத்த முகத்தை பார்த்த வாசுகி “யாழு…” என்றார் குரல் தழுதழுக்க,
“வச்சிட்டு போங்கனு சொன்னேன்” என்றாள் அழுத்தம் திருத்தமாக,
சொன்னவள் அவரை ஏறிட்டும் பார்க்கவில்லை.
அவளை ஓர் அடிபட்ட பார்வை பார்த்தவர் விசும்பி அழ ஆரம்பித்து விட, ” என்ன வாசுகி இது? நல்ல நாள் அதுவுமா அழுதிட்டு இருக்க? அவ ரெடி ஆகட்டும். வர்றவங்களை எல்லாத்தையும் குணால் மட்டும் பார்த்திட்டு இருக்கான் நாம இல்லனா நல்லாவா இருக்கும்?” என்றவர் அவரின் கரம் பற்றி வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து செல்ல முயல,
“முடியாது…யாழுவை தனியா விட்டுட்டு வர மாட்டேன் நீ போ ஷீலா” என்றவர் அங்கேயே நின்று கொள்ள,
பதில் எதுவும் சொல்லாது இருவரையும் உணர்வற்று வெறித்தவள் பார்வை இப்போது தன் அன்னை மேல் அழுத்தமாக படிந்தது.
அவளின் வெறித்த பார்வையில் துணுகுற்றவர் என்னவோ சொல்ல வருவதற்குள் அவளே ” நான் செத்துட மாட்டேன் சோ நீங்க போகலாம்” என்றவள் திரும்பி விறுவிறுவென குளியலறைக்குள் புகுந்து கதவை தாழிட்டு கொண்டாள்.
அவளின் வார்த்தைகளில் அதிர்ந்து போன வாசுகியோ உடைந்து போனவராய் குளியலறையை நோக்கி விரய, அவரைப் போக விடாமல் தடுத்து பிடித்த ஷீலாவோ “அவளை டிஸ்டர்ப் பண்ணாத. அவளே நிதானமா வருவா” என்று சொல்லிக் கொண்டே வாசுகியின் கரம் பற்றி வெளியில் அழைத்து வந்தவர் ஒரு பெரு மூச்சுடன் “அவளோட காதல் ஆழமானது வாசுகி. அவளோட மனநிலை படி அவ உயிருக்குயிரா காலதலிச்சவன் அவளோட மொத்த காதலையும் மறந்துட்டானு சொல்றப்போ அவளோட இடதுல இருந்து யோசிச்சு பார். கொஞ்சம் கொஞ்சமா அவளை மீட்டு எடுத்துடலாம். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரே வீட்ல இருந்தா எல்லாம் சரி ஆகிடும்” என்றவரை, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டே ஏறிட்ட வாசுகி ” நாம பெரிய தப்பு பண்ணிட்டோம் ஷீலா. நான் உன்கிட்ட முதல்ல சொன்ன போல எல்லா உண்மையையும் மாத்தாம இப்பவே சொல்லி இருக்கலாம்” என்று கூற,
“உனக்கென்ன கிறுக்கு பிடிச்சு இருக்கா? பார்த்த தானே ஆக்சிடென்ட்… மெமரி லாஸ்னு சொன்னதுக்கே அவளோட முகத்தை, அப்போ நாம மறைச்சு வைக்க பார்க்குற உண்மை அவளுக்கு தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவானு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல” என கலங்கிய குரலில் சொன்னவர் ” கொஞ்ச நாள் போகட்டும் என் பையனும் அவளை விரும்பணும் என ஒரு நொடி அமைதிக்கு பின் விரும்புவான். அவங்களுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் பிரிஞ்சி இருக்க முடியாத பாண்ட் உருவாகணும் வாசுகி. அப்புறமா அவளுக்கு எல்லாமே எடுத்து சொல்லிக்கலாம் சோ இப்பவே தேவையில்லாமல் அவகிட்ட எதுவும் உளறி வைக்காத” என்றிட,
” என்னவோ போ… என் பொண்ணு என் முகத்தை கூட பார்க்குறா இல்ல ஏன் பேசுறா கூட இல்லையே” என்றவர் இதழ்கள் கீழ் நோக்கி வளைந்தன.
“அவ உனக்கு மட்டும் இல்ல இனி எனக்கும் பொண்ணு தான் வாசுகி. யாழிசையை உன்கூட பேச வைக்கிறது என் பொறுப்பு சோ நீ தேவையில்லாமல் எதுவும் திங்க் பண்ணி உடம்பை கெடுத்துக்காத” என்ற படி வாசுகியை தோளோடு அணைத்துக் கொண்டு நுழைவாயிலை நோக்கி நடக்க, போகும் அவர்களை ஓர் எள்ளல் நகை இதழ்களில் தவழ பார்த்திருந்தான் அவர்களின் எண்ணத்தின் நாயகன் ஜிதன்.
அவர்கள் இருந்த அறையிலிருந்து ஆறு அறைகள் தள்ளி அதோனோடு வெளிப் பக்கமாக அமைக்கப்பட்டிருந்த பால்கனியில் நின்று அலைபேசியில் கதைத்துக் கொண்டே திரும்பியவன் கண்டது இருவரும் என்னவோ பேசிக் கொண்டு நிற்கும் காட்சியை தான்.
” தப்பு பண்ணிட்டீங்க மா. நான் கண்டவளை என் லைஃப் பார்ட்னரா அச்செப்ட் பண்ணி வாழ்ந்துடுவேனு நினைச்சிங்களா என்ன? நெவர் எவர்” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவனுக்கு இப்போதே அவளைக் கண்டால் கடித்து குதறி விடும் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் நின்றிருந்தான் அவன்.
**********************
இங்கோ, விம்மி வெடித்து அழுத தடயம் மாறாது உடல் இறுக சிலைப் போல் திறந்து விடப்பட்ட ஷவரின் கீழ் நின்றிருந்தவளுக்கு அந்த குளிர் நீர்க் கூட மனதின் வெம்மையை தணிக்க மறுத்தது போலும், அதீத அழுத்தம் மனதை சூழ நிலை குழைந்த நிலையில் குளியலறைக்கு கதவைத் திறந்துக் கொண்டு அறைக்குள் நீர் சொட்ட சொட்ட வந்தவளுக்கு தன்னவனைக் காண வேண்டும் என்ற வெறி நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே இருந்தது.
நீரினை துடைக்கக் கூட தோன்றாமல் பார்வையை சுழல விட்டவள் பார்வை ஓர் இடத்தில் நிலைக்குத்தி நிற்க, மெல்ல அடி மேல் அடி வைத்து கட்டிலை நெருங்கியவள் பார்வையோ பல லட்சங்களை விழுங்கிய அடர் சிவப்பும் தங்க ஜரிகை வைத்த பட்டாலான முகூர்த்த புடவையில் மீது அழுத்தமாக படிந்தது.
‘ டார்க் கிரீன் வித் மெரூன் பார்டர் சாரில உன்ன நம்ம வெட்டிங் நைட்ல பார்க்கணும் இசை’ என ஒரு நாள் இரவில் அவன் குரல் வழி கேட்டது நியாபகத்துக்கு வரவும் மலுக்கென விழிகளில் நீர் சூழ்ந்து விட்டது.
வலக் கரம் உயர்த்தி தனது இடது மார்பின் மீது வைத்தவள் “ஜிது மா ஏன் என்னை மறந்தீங்க? எ…எனக்கு இங்க வலிக்குது என்னவோ நான் யாருமே இல்லாம இருக்க போல பீல் தருது” என்றவள் மார்புக் கூடோ ஏறி இறங்க, விசும்பலாக ஒலித்த அவளது கேவல் கொஞ்சம் கொஞ்சமாக விம்மி வெடித்தது.
கால் மடித்து தரையில் அமர்ந்தவளுக்கு அவனது காதல் இன்றி தனித்து காட்டில் விடப்பட்ட உணர்வு.
முதல் முதலாக எதிர் கொள்ளும் தனிமையும் வெறுமையும் அவளுக்கு அதீத வேதனையையும் அழுத்தத்தையும் அள்ளிக் கொடுத்திட அப்படியே விழிகள் மூடி கட்டிலில் தலை சாய்ந்தவள் விழிகளுக்குள் மென் புன்னகை இதழ்களில் தவழ வசீகரமான தோற்றத்தில் தோன்றி அவளின் எண்ணவோட்டத்தின் அழுத்தத்தினை வெகுவாக குறைத்திருந்தான் அவளவன்.
நொடி நேரத்தில் மனதினை சூழ்ந்த அமைதியில் விழிகளை பட்டென்று திறந்தாள்.
இவ்வளவு நேரமும் அருவியாக கொட்டிக் கொண்டிருந்த கண்ணீர் கூட நின்று போயிருக்க அவளுள் ஓர் ஆசுவாசம்.
நொடியில் தன் விழிகளுக்குள் தோன்றி மறைந்து தன் உணர்வுக் குவியல்களுக்குள் இருந்து மீட்டவனை காண வேண்டி உள்ளமோ பேரில்லா உவகை கொண்டது.
முடிவெடுத்து விட்டாள்.
எங்கிருந்து தான் அத்தனை பலம் வந்ததோ!
விறுவிறுவென எழுந்து ஹங்கேரிலிருந்த துவாளையை எட்டி எடுத்தவள் உடைகளைக் களைந்து விட்டு மார்பு வரை துவாளையை சுத்திக் கொண்டே தன் நடுங்கும் கரத்தால் முகூர்த்த புடவையை எடுத்து தன் மேல் வைத்து பார்த்தவள் சடுதியில் என்னென்னவோ தோன்ற, தன் நினைவலைகளை கடிவாளமிட்டு கட்டுப் படுத்திக் கொண்டே புடவையைக் கட்ட ஆரம்பித்து விட்டாள்.
அவளுள் அத்தனை வேகம்.
எதிலும் நேர்த்தி, தான் அழகாக இருக்க வேண்டும் என சிரத்தை எடுத்து உடைகளை அணிந்து கொள்பவள் ஏனோ தானோ என்று வேக வேகமாக மடிப்புகளை எடுத்து கட்டினாள்.
அவன் தன் காதலை, ஏன் தன்னை மறந்தால் என்ன? அவனுடனான ஆறே ஆறு மாதங்களாக பேசிய நினைவுகள் அவள் மனதில் அழியா சுவடுகளாக படிந்திருக்க இனி அவனுடன் சேர்ந்து வாழப் போகும் நாட்களை எண்ணி மனதில் ஒரு வித நம்பிக்கை துளிர் விட்டது.
**************
புரோகிதர் ஒவ்வொன்றாக மந்திரங்களை கூற தனக்கும் இதற்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லை எனும் ரீதியில் இறுகிய தோற்றதுடன் மேடையில் தன் அன்னையின் முகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் ஜிதன்.
அவரை பார்க்கப் பார்க்க ஆத்திரமாக வந்தது.
அவரின் உயிரை வைத்தல்லாவா அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தார் ஷீலா.
ஹோமகுண்டலத்தில் எரிந்து கொண்டிருந்த அனலை விட அவனது மனமோ பன்மடங்காக தகித்துக் கொண்டு இருந்தது.
அவனால் இப்போதும் கூட இந்த திருமணத்தை நிறுத்தி விட முடியும் ஆனால் தன் அன்னை என வரும் போது அவனால் வேறெதையும் சிந்திக்க சிந்தை இடம் கொடுக்காது போக வேறு வழியின்றி, உடல் விறைக்க அமர்ந்திருந்தவனிடம்,
அவனின் மனநிலை அறியாது “சோம ப்ரதமோ விவித…” என்ற மந்திரத்தை உச்சரித்த புரோகிதரோ “மந்திரத்தை சொல்லுங்கோ” என்ற படி ஓமத்தினை நீட்ட,
இருக்கும் எரிச்சலில் அவனுக்கோ கண்மண் தெரியாத ரௌத்திரம் தாறுமாறாக ஏறியது.
பல்லை கடித்த படி அவன் பார்த்த தீ பார்வையில் நீட்டிய கரத்தை தன்னை நோக்கி இழுத்துக் கொண்ட புரோகிதரோ எதுவும் நடக்காதது போல அவராகவே மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு போக, அவனின் செய்கைகளை பார்த்துக் கொண்டிருந்த ஷீலாவுக்கு தான் கடுப்பாக வந்தது.
சபையிலாவது சிரித்த முகத்துடன் இருக்கின்றானா இவன்? எப்போதும் கடுவன் பூனை போல முறுக்கிக் கொண்டு இருப்பது அவருக்கே அவனின் போக்கை திருத்த முடியாது சலிப்பாக இருந்தது.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே என்னவோ ஓர் உந்துதலில் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தான்.
பார்த்ததும் ஒரே ஒரு கணம் தன் அருகில் மணமகளாக அமர்ந்திருப்பவளின் காந்தப் பார்வையில் தடுமாறித் தான் போனான் ஆணவன்.
ஆம், அவன் புரோகிதரை அனல் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் அவளும் சுற்றம் புடை சூழ அவனையே பார்வையால் விழுங்கிய படி மேடையை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.
சுட்டெரிக்கும் வெயிலில் நாவறண்டு, பாதங்கள் கொப்பளிக்கத் திசைதெரியாமல் மடிந்து விடுவோமா என்றெண்ணி தவிக்கும் கணத்தில், எங்கிருந்தோ வந்த மேகக்கூட்டம் பொழிந்த மழையைப் போல அவளது உள்ளமும் இன்று இந்த நொடி ஓர் இனம்புரியாத உயிர்மீட்சியில் திளைத்துக் கொண்டிருந்தது.
தன்னை ஒரு பார்வையாவது பார்த்து விட மாட்டானா? என்ற ஏக்கம் விழிகளில் தொக்கி நிற்க, அவனருகில் வந்தமர்ந்தவள் அவனையே விழி அகலாமல் பார்த்திருந்தாள் பாவை.
இவ்வளவு நேரமும் புரோகிதரை முறைத்து விட்டு இதழ் குவித்து ஊதிக் கொண்டே முன்னால் பார்வையை திருப்பியவன் என்ன உணர்த்தானோ என்னவோ ஓர் உந்துதலில் அப்போது தான் அவனும் அவள் புறம் பார்வையை திருப்பி இருக்க,
இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன.
இங்கோ, இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ஷீலாவுக்கு மட்டும் அல்ல வாசுகிக்கும் கூட அந்த ஷணம் மனதில் சொல்லொணா ஆசுவாசமொன்று படர்ந்து விரவியது.
அவளின் ஆளை விழுங்கும் பார்வையில் சட்டென சுதாரித்து வெறுப்புடன் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டவன் மறந்தும் அவள் புறம் திரும்பவே இல்லை.
அவனின் வெறுப்பான பார்வையில் அவள் மனதில் மீண்டும் மீண்டும் உரு போட்டு தேக்கி வைத்திருந்த தைரியம் மொத்தமும் காணாமல் போன அதே கணம் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் உருவமில்லா பயப்பந்து உருள்வதை போன்ற உணர்வு எழுவதை அவளால் உணர முடிந்தது.
என்னவோ இனம்புரியாத பயம் நெஞ்சைக் கவ்வியது.
சட்டென மீண்டும் தொண்டையை அடைத்த அழுகையை அடக்க படாத பாடு பட்டு போனாள் பெண்ணவள்.
புரோகிதரோ, அனைவராலும் ஆசீர்வதிக்கப்பட்டு கரம் சேர்ந்த மங்கலநாணை அவனை நோக்கி நீட்ட, அதையே வெறித்துப் பார்த்தவன் தன் அன்னையின் பார்வை வீச்சில் இரு கரம் கொண்டு மங்கல நாணை பெற்றுக் கொண்ட அதே நேரம் சுற்றிலும் ஒலித்த கெட்டிமேளதுடன் சேர்ந்து சுற்றம் சூழ அட்சதை தூவப்பட, அவளின் விழிகளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே மங்கல நாணை அவளின் சங்குக் கழுத்தில் பூட்டி தனது சரிபாதியாக்கிக் கொண்டான்.
காலங்கள் சுமந்த காயங்களுக்கு
காலன் இட்ட மருந்தாய் – உன்
விரல்கள் என் கழுத்தின் பின் தீண்டுகையில்,
என் உயிர் வரை ஊடுருவிய உணர்வுப்பிரவாகத்தில்
சுகமாய் மூழ்கி திளைத்தேனடா!
